வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (18:44 IST)

ரஜினியோடு கூட்டணி அமைப்பேன்! – ஒத்துக்கொண்ட கமல்!

தேவைப்பட்டால் நானும் ரஜினியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்வோம் என கமல்ஹாசன் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே கட்சி ஆரம்பிக்கும் பணிகளை தொடங்கினார். அதன் ஒருபகுதியாக ட்விட்டரில் தமிழக அரசியல் சூழலை விமர்சித்து கருத்து தெரிவித்து வந்த கமல்ஹாசன், மதுரையில் மாநாடு நடத்தி மக்கள் நீதி மய்யத்தை தொடங்கினார். கிராம சபை கூட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வது, மக்களாட்சி தேர்தலில் போட்டியிட்டது என்று அரசியலில் கவனிக்கத்தக்க விஷயங்களை செய்து மக்கள் நீதி மய்யத்தை நல்ல லெவலுக்கு கொண்டு வந்துள்ளார்.

அதேசமயம் ரஜினி தனது கட்சி பெயரை அறிவிக்காவிட்டாலும் கட்சி தொடங்குவது என்பதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக முன்பே மாவட்ட அளவிலான நிர்வாகிகளை அழைத்து பேசியுள்ள ரஜினி தக்க சமயத்திற்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி பாஜகவில் இணைவார் என்று பரவலாக நம்பப்பட்டு வந்த நிலையில் ஒரே பேட்டியில் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்து தனது கட்சி தனியாக செயல்படும் என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாள் மற்றும் திரைத்துறை சேவையை பாராட்டி நடந்த நிகழ்ச்சியில் அரசியல் சார்ந்த பல விஷயங்கள் பேசப்பட்டன. தற்போது கமல்ஹாசன் நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம் என்று கூறியுள்ளார்.

ரஜினி தரப்பிலிருந்து இதற்கு இன்னும் பதில் சொல்லாவிட்டாலும் கூஅ ரஜினியும் இந்த டீலுக்கு சம்மதிப்பார் என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் ஆளும்கட்சியும், எதிர்கட்சியும் கூட கூட்டணி கட்சிகளை பலமாக வைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இருவரும் தன்னிச்சையாக நிற்பது வாக்கு வங்கியை பாதிக்கும் என்பதை அவர்கள் உணர்ந்தே இருக்கலாம். தேவைப்பட்டால் கூட்டணி என்று கமல் கூறியிருந்தாலும் தேவை வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.