1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (11:53 IST)

கனவு காண்பதை குறுக்கிட முடியாது - ஜெயகுமார் பாஜகவுக்கு பதிலடி!

ஆட்சியமைக்க வேண்டும் என்று கனவு காண்பது அவர்களின் (பாஜக) லட்சியம், அதில் யாரும் குறுக்கிட முடியாது என ஜெயகுமார் கருத்து.

 
அதிமுக மூத்த தலைவர் பொன்னையன், பாஜக வளர்வது நல்ல தல்ல. அதிமுக ஓட்டுக்களை தான் பாஜக பிரிக்கின்றது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பாஜக குறித்து அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்து என்று அது அதிமுகவின் கருத்து அல்ல என்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கூறினார். 
 
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் 3வது பெரிய கட்சி யார், என்பது தெளிவாகியுள்ளது. வரும் 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 25 எம்.பிக்கள் கிடைப்பார்கள். இந்த தேர்தலில் பெரும் திரளாக பாஜகவிற்கு ஆதரவு கிடைக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், ஆட்சியமைக்க வேண்டும் என்று கனவு காண்பது அவர்களின் (பாஜக) லட்சியம், அதில் யாரும் குறுக்கிட முடியாது. ஆனால், மக்கள் செல்வாக்கு என்றால் அதிமுகவுக்குத்தான் என்றைக்கும் உள்ளது. மேல்மட்ட அளவில் தலைவர்கள் இதோடு முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். அத்துடன் விட்டுவிட்டோம்.
 
எனவே, இதில் அதிமுக - பாஜக நட்புக்கு பெரிய அளவில் விரிசல் எதுவும் கிடையாது. தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று முயற்சி செய்யும். அது அவர்களின் விருப்பம். ஆனால், எது எப்படியிருந்தாலும் அடுத்து நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்றார்.