1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chennai high court declare bail to senthil balaji

செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன் ஜாமீன்!.. தவெகவுக்கு பின்னடைவு!...

senthil balaji
தவெக ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்.எல்.ஏ இளங்கோவிடம் 35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களின் சிலர் கரூரை சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நெருக்கமானவர்கள் என சொல்லப்படுகிறது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என தமிழக காவல்துறை சம்மன் அனுப்பியது.. ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் சார்பில் முன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


அவர்கள் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ‘ஆட்சியை கவிழ்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை.. திமுகவில் 59 எம்எல்ஏக்கள் மட்டும் இருக்கும் நிலையில் ஆட்சியை கவிழ்க்க முடியாது.. இது முழுக்க முழுக்க யூகத்தால் ஜோடிக்கப்பட்ட வழக்கு.. 35 கோடி என்பது யூகம் மட்டுமே.. கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசும் அசோக்குமாரும் கரூரில் இருந்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அசோக் குற்றம் செய்தவராகிவிட மாட்டார்’ என்றெல்லாம் வாதங்களை முன் வைத்தார்.

ஆனால், தமிழக அரசு தரப்பு ‘ஆட்சியை கவிழ்க்க சதி செய்திருக்கிறார்கள்.. ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுகிறது. சம்பந்தப்பட்டவர்களுக்கும் அசோக் குமாருக்கும் தொடர்பு இருப்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கிறது’ என்றெல்லாம் வாதங்களை முன் வைத்தது.

இறுதியில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் இருவருக்கும் நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
இது  தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. வருகிற 10ஆம் தேதி முதல்வர் விஜய் கரூருக்கு செல்வதற்கு முன் அவர்கள் செந்தில் பாலாஜி, அசோக் குமார்  இருவரையும் கைது செய்யும் முயற்சி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் தற்போது அது தோல்வியில் முடிந்திருக்கிறது.