ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 1 டிசம்பர் 2019 (17:48 IST)

நாளை 9 மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை மிதக்குமா?

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அதன் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விட்டதாகவும் இதனால் அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
சென்னையில் ஒரு சில இடங்களில் மழை நீர் குடியிருப்புகளில் புகுந்து விட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு சில மணி நேரங்களில் 15 சென்டி மீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடங்களில் தங்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர் 
 
 
ஏற்கனவே கனமழை காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்தில் இருப்பதோடு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் தத்தளித்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பால் சென்னையின் பெரும்பாலான பகுதி வெள்ளத்தில் மிதக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
 
 
இந்த நிலையில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் 9 மாவட்டங்களில் நாளை விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எனினும் நாளை அந்தந்த மாவட்டத் ஆட்சித் தலைவர்களின் அறிவிப்புக்குப் பின்னர் இந்த விடுமுறை உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது