1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (17:01 IST)

செப்.14 முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்!

செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிப்பு. 
 
கொரோனா காலத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, ஆளுநர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொற்று ஏற்பட்டது. எனவே, புனித ஜார்ஜ் கோட்டையில் தனிமனித இடைவெளியுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்துவது சாத்தியமில்லை என்பதால் மாற்று இடம் தேடப்பட்டு வருகிறது.  
 
இதற்கு முன் 6 முறை மாற்று இடங்களில் பேரவை கூட்டம் நடந்துள்ளது. எனவே, கொரோனாவால் மீண்டும் கலைவாணர் அரங்கில் தற்காலிக சட்டமன்றத்தை கூட்டலாமா என பேச்சு எழுந்தது. அதாவது அங்கு ஆயிரம் பேர் அமரும் வகையில் இட வசதி உள்ளதால், தனிமனித இடைவெளியுடன் அங்கு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டு வந்தது.  
 
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள் வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சென்னை அகலைவாணஎ அரங்கத்தை பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்யவுள்ளது. மேலும், கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டம் என தகவல் வெளியானது. 
 
அதன்படி தற்போது செப்டம்பர் 14 ஆம் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.