வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2018 (12:31 IST)

தகுதி நீக்க வழக்கு தினகரனுக்கு சாதகமாக வந்தால்? - எடப்பாடி போடும் கணக்கு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என ஆளும் எடப்பாடி தரப்பு ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

 
தினகரன் பக்கம் சென்ற 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து அந்த எம்.எல்.ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பல கட்ட விசாரணைக்கு பின் வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
அநேகமாக இன்னும் ஒரு மாதத்திற்குள் அந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், தங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு அமையும் என டிடிவி தினகரன் தரப்பு கருதுகிறது. அதனால்தான், இன்னும் விரைவில் ஆட்சி கவிழும் என தினகரன் தொடர்ந்து ஊடகங்களில் கூறி வருகிறார்.
 
ஒருபக்கம், தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு வருவதற்கே வாய்ப்பு அதிகம் என எடப்பாடி தரப்பிற்கு சொல்லப்பட்டதாம். எனவே, ஆட்சியை கவிழ்ப்பதை தடுக்க சில வழிகளை எடப்பாடி கையாண்டு வருகிறார். அதாவது, தீர்ப்புக்கு பின் தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் சிலர் தன் பக்கம் வருவார்கள் என அவர் கணக்குப் போடுவதாக தெரிகிறது.
 
அதற்கான முயற்சிகள் எப்போது தொடங்கி விட்டது என அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஏற்கனவே, பதவி இல்லாமல் இத்தனை மாதங்களாக அனைத்து வசதிகளையும் இழந்து விட்டீர்கள். தீர்ப்பு ஒரு வேளை உங்களுக்கு சாதகமாக வந்துவிட்டால், நிச்சயம் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். எனவே, இன்னும் சில மாதங்களுக்கு பதவியும், சலுகையும் இல்லாமல் இருக்க வேண்டியிருக்கும். எனவே எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது.
 
இதை தினகரனும் உணர்ந்துள்ளார். எனவே, அவர்களை தன்னுடைய வசம் வைத்துக்கொள்ளும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.