1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (20:45 IST)

துண்டான கையை ஒரு பைசா செலவில்லாமல் ஒட்ட வைத்த டாக்டர்கள்

11 வயது சிறுவன் ஒருவனின் கை, விபத்து ஒன்று துண்டான நிலையில் அந்தக் கையை ஒரு நயா பைசா செலவில்லாமல் மீண்டும் ஒட்ட வைத்து மருத்துவர்கள் குழு சாதனை செய்துள்ளது
 
சேலம் அருகே கூலி தொழிலாளி ஒருவரின் மகன் மௌலீஸ்வரன். 11 வயதான இந்த சிறுவன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள சைக்கிள் கடையில் காற்று பிடிக்கும் இயந்திரம் திடீரென வெடித்து, அதிலிருந்து பறந்து வந்த ஒரு இரும்புத் துண்டு சிறுவனின் வலது கையை துண்டாக்கியது.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுவனின் பெற்றோர்கள் உடனடியாக அந்த கையை ஒரு பிளாஸ்டிக் பேப்பரில் போட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். துண்டான கை அரை மணி நேரத்திற்குள் வந்ததால் மீண்டும் இணைத்து விடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கையுடன் உடனடியாக அந்த சிறுவனுக்கு சர்ஜரி செய்தனர். பதினோரு மணி நேரம் போராடி வெற்றிகரமாக துண்டான கையை மருத்துவர்கள் குழு இணைத்து சாதனை புரிந்தது.
 
பொதுவாக உடலில் எந்த பகுதியில் உள்ள உறுப்புகள் துண்டானாலும் ஆறு மணி நேரத்திற்குள் பாதுகாப்புடன் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றால் மீண்டும் இணைப்பது சாத்தியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் மௌலீஸ்வரன் கை, துண்டான அரை மணி நேரத்தில் எடுத்து வரப்பட்டதால் இணைக்க முடிந்தது என்றும், இன்னும் ஒரு சில நாட்களில் அந்த சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர் 
 
இதே அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டிருந்தால் ரூபாய் 5 லட்சத்திற்கும் மேல் செலவாகி இருக்கும் என்றும், ஆனால் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சையை இலவசமாக ஒரு நயா பைசா கூட செலவு செய்யாமல் செய்யப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்