1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : புதன், 13 நவம்பர் 2019 (18:00 IST)

அரசுக்கு எதிரான வழக்குகள் வாபஸ்; அதிமுகவிடம் சரணடைகிறதா தேமுதிக??

தமிழக அரசுக்கு எதிராக தொடுக்கப்பட்ட 29 வழக்குகளை வாபஸ் வாங்கியுள்ளது தேமுதிக

கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்த தேமுதிக மிகப்பெரிய சறுக்கலை கண்டது. மேலும் திமுக கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வருவதாக கருதப்பட்டது.

ஆனால் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அபார வெற்றி பெற்ற நிலையில் அதிமுகவின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு எந்த பாதகமும் இல்லை என அதிமுக தரப்பினர் கூறி வந்தனர்.

அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், தற்போது தேமுதிக தமிழக அரசுக்கு எதிரான 29 வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது.  2011 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்ற சமயத்தில் பலமான எதிர்கட்சியான தேமுதிக திகழ்ந்தது. ஆனால் அதற்கடுத்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் பெரும் சறுக்கலை கண்டது. பின்பு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தின் உடல் நிலை காரணமாக கள அரசியலில் அக்கட்சியின் பங்களிப்பு குறைந்து போனது.

பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் ஆகியோர் கட்சியை வழிநடத்த செல்ல முயன்றாலும் மக்கள் மத்தியில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என கூறலாம்.

மேலும் சமீபத்தில் நிரூபர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ”எங்கள் பலத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட சதவீதத்தை அதிமுக வழங்கும் என எதிர்பார்ப்பதாக” கூறியுள்ள நிலையில் தமிழக அரசுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை விஜயகாந்த், மற்றும் பிரேமலதா விஜயகாந்த் வாபஸ் பெற்றுள்ளனர். இதனை கொண்டு தேமுதிகவின் கட்டமைப்பை வலுப்படுத்த அதிமுகவிடம் உதவி கரம் நீட்டுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.