1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (09:02 IST)

கமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி – ஹேஷ்டேக் உருவாக்கி மக்கள் நீதிமய்யம் பதிலடி !

கமலின் அரசியல் பிரவேசம் சிவாஜியின் அரசியல் வாழ்வைப் போல முடியும் என கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் ஹேஷ்டேக் உருவாக்கியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரில் நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கமலின் அரசியல் பிரவேசம் பற்றி பேசினார். அப்போது ‘வயதானதால் படங்கள்  இல்லாததால் நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். அரசியல் பற்றி நடிகர் கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்?. அவரது கட்சிக்காரர்களாவது தனது படத்தைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அவர் கட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார். அவர் பெரிய தலைவராக இருந்தால் ஏன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெல்லவில்லை. சிவாஜி கணேசனின் நிலைமைதான் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு ஏற்படும். இடைத்தேர்தல் முடிவுகளில் இருந்தே தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இல்லை என்பது தெரிந்திருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வரின் இத்தகைய பேச்சுக்கு மக்கள் நீதி மய்யத்தை முன்னனி தலைவர்கள் பதிலளித்துள்ளனர். அதன் துணைத்தலைவர் மகேந்திரன் ‘அரசியல் என்பது அனைத்து மக்களுக்கும் நல்லதை, நேர்மையாக செய்ய விரும்பும் ஒவ்வொரு குடிமகன்களின் உரிமை, கடமை மற்றும் பொறுப்பு. அதை ஒரு லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நினைப்பவர்கள், எங்கள் தலைவர் கமல்ஹாசனை போன்ற நேர்மையானவர்களைக் கண்டு பயப்படுவது நியாயம் தான்’ எனத் தெரிவித்து மற்றொரு டிவிட்டில் ‘கமல் நேர்மைக்கு பயந்த எடப்பாடி’ என்று ஹாஷ்டேக்கைப் பதிவிட்டு, “நமக்கு வேலை நிறைய இருக்கிறது. இவர்களுக்குப் பதில் சொல்வது கால விரயம். இணைவோம்! எழுவோம். நாளை நமதே! நிச்சயம் நமதே!!’ எனக் கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு முக்கியப் பொறுப்பாளரான மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப் பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ், “உங்கள் அரசியல் அவருக்குத் தெரியாதுதான் முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களே. ஆனால், அவர் அரசியல் உங்களால் செய்ய முடியாது. ஏனென்றால் அது நேர்மை அரசியல்” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.