1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (08:32 IST)

ஓடைக்குள் இறங்க கூடாது; சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

sathuragiri
சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு மாதம்தோறும் பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் இந்த மாதம் இன்று பிரதோஷம், நாளை சிவராத்திரி, மறுநாள் அமாவாசை என சிவனுக்கு உகந்த நாட்களாக உள்ளதால் இன்று 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் தங்கக் கூடாது. கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடையில் இறங்க கூடாது. கனமழை பெய்யும் பட்சத்தில் அனுமதி ரத்து செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.