தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 244 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 16,577 ஆக அதிகரித்துள்ளது . இதனால் மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மழைக்காலம் மற்றும் அதனைத் தொடர்ந்து தேங்கும் தண்ணீரால் கொசுக்கள் பெருகும் சூழல் உருவாகுவதால், டெங்கு பரவும் அபாயமும் அதிகரிக்கக்கூடும். எனவே வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, கொசு உற்பத்தியைத் தடுப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.

