1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (15:01 IST)

காங்கிரஸ் சார்பில் விருப்பமனு வரவேற்பு: ரூ.500 செலுத்தினால் போதும்: செல்வப்பெருந்தகை

congress
காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் ரூ.500 செலுத்தி, இன்று முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நடைபெறவுள்ள 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், அத்துடன் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் 233 - விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்கள் ரூ.500  கட்டணமாக செலுத்தி விருப்ப மனுப் படிவத்தை இன்று (18.03.2024) திங்கட்கிழமை முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் பெற்றுக் கொள்ளலாம்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுப் படிவங்களை 20.03.2024 புதன்கிழமை மதியம் 1 மணிக்குள் நாடாளுமன்ற பொதுத் தொகுதிகளுக்கு ரூ.30,000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்), நாடாளுமன்ற தனித்தொகுதி மற்றும் மகளிருக்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் ரூ.15,000/- (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்), அதேபோல விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) மகளிருக்கு ரூ.5,000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்) கட்சி நன்கொடையாக TAMILNADU CONGRESS COMMITTEE என்ற பெயரில் வங்கி வரைவோலையாக (Demand Draft Payable at Chennai) மட்டுமே செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
 
விருப்ப மனு அளிக்கும் அனைவரும் அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் முழுமையாக பூர்த்தி செய்தும், தனியாக இணைக்கப்பட வேண்டிய இதர விபரங்களை விருப்ப மனுவுடன் இணைத்தும் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். விருப்ப மனு அளிக்கும் அனைவரும் தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை , ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு  நகலை கட்டாயம் இணைக்க வேண்டும்.
 
 
Edited by Siva