1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Armstrong's murder! Animosity in Bar Council elections? Paul Kanagaraj is being investigated for stealing..

ஆம்ஸ்ட்ராங் கொலை.! பார் கவுன்சில் தேர்தல் முன்விரோதமா? பால் கனகராஜிடம் கிடுக்குப்பிடி விசாரணை.!!

Paul Kanagaraj
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பாஜக நிர்வாகி பால் கனகராஜிடம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது கூட்டாளி திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதில், திருவேங்கடம் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
 
மேலும் இந்த கொலை தொடர்பாக திமுக, அதிமுக, பாஜக, தமாகா கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பல தரப்பட்டவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் உள்ளனர். இந்நிலையில் பாஜக நிர்வாகிகளில் ஒருவரான பால் கனகராஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டுமென செம்பியம் காவல் நிலைய போலீஸார் நேற்று இரவு சம்மன் அனுப்பி இருந்தனர்.
 
இதையடுத்து பால் கனகராஜ் எழும்பூரில் உள்ள தனிப்படை போலீசாரின் அலுவலகத்தில் இன்று காலை விசாரணைக்கு நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உயர்நீதிமன்ற பார் கவுன்சில் தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிகின்றன.


கடந்த பார் கவுன்சில் தேர்தலில் பால் கனகராஜ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனவே தேர்தல் முன் விரோதம் காரணமாக ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.