ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு மோடி சென்றது ஓய்வை அறிவிக்கவா? சிவசேனா கேள்வி..!
பிரதமர் நரேந்திர மோடி தனது ஓய்வு குறித்து ஆலோசிக்கவே ஆர்எஸ்எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்பது அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூரில் அமைந்துள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு சமீபத்தில் பிரதமர் மோடி சென்றிருந்தார். பிரதமராக பதவியேற்ற பிறகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அங்கு முதன்முறையாக விஜயம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், "பதவிக்காலம் முடிந்து விட்டதால், ஓய்வு குறித்து அறிவிக்கவே மோடி ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்குச் சென்றார். ஆர்எஸ்எஸ் புதிய தலைமை மாற்றத்தை விரும்புகிறது. அடுத்த பிரதமரை அவர்கள் தேர்வு செய்வார்கள்" என்று சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
இந்த கருத்து அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஹுசைன் தல்வாய், "75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வு அறிவிப்பது ஆர்எஸ்எஸ் நெறிமுறை. மோடியின் காலம் முடிந்துவிட்டது" என்றார்.
Edited by Mahendran