1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:53 IST)

ஏசி ரூமில் உட்கார்ந்து இஷ்டத்துக்கு முடிவு.. ஸ்டாலினை சீண்டும் அண்ணாமலை

ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இஷ்டத்துக்கு முடிவு செய்யக் கூடாது என அண்ணாமலை பேச்சு.
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. தமிழ்நாட்டில் வருகிற செப்யம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை கொண்டாடப்படவுள்ள சமய விழாக்களின் கொண்டாட்டங்களிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
 
அதில் செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவும் அடங்கும். ஆம், விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுக்காமல், தமிழக அரசு முரட்டு பிடிவாதமாக இருக்க காரணம் என்ன? என்று தெரியவில்லை. பாஜக தொண்டர்கள் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 முதல் 12 ஆம் தேதி வரை 3 நாட்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன்பு பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள்.
 
இது, தனி மனித உரிமை. இதனைத்தடுக்க யாருக்கும் அனுமதியில்லை. மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி போல், தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கட்டுபாடுகளுடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு முதல்வர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இஷ்டத்துக்கு முடிவு செய்யக் கூடாது. இன்னும் காலம் கடக்கவில்லை. வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என கூறியுள்ளார்.