வியாழன், 5 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 5 பிப்ரவரி 2026 (14:31 IST)

என் மகனை அடிச்சி கொன்னுட்டாங்க!.. நிகிதாவுக்கு உதவிய அந்த பெரிய இடம் யார்?.. அஜித்குமார் தாய் கேள்வி..

ajith
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் மீது நிகிதா என்பவர் கடந்த வருடம் ஜூன் 27ஆம் தேதி நகை திருட்டு புகார் கொடுத்தார்.. தனிப்படை போலீசார் அஜித்குமாரை அழைத்து சென்று கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்..

இது தொடர்பாக தனிப்படை காவலர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.. அதன்பின் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிறையில் இருக்கும் ஐந்து காவலர்களும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நிகிதா பொய் புகார் கொடுத்திருக்கிறார் என சிபிஐ தரப்பில் சொல்லப்பட்டது.

இதையடுத்து கோபமடைந்த நீதிபதிகள் ‘காவலர்களுக்கு ஜாமின் கொடுக்க முடியாது,. அவர்கள் சிறையிலேயே இருக்கட்டும். அவர்களுக்கு நீதிமன்றம் பாடம் புகட்டும்’ என கூறினர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமாரின் தாய் மாலதி ‘என் மகன் மீது நிகிதா பொய் புகார் கொடுத்தது உறுதியாகியிருக்கிறது. என் மகன் திருடன் இல்லை என நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்.. அது மகிழ்ச்சிதான் என்றாலும் என் மகனை இழந்திருக்கிறேன்..

என்ன காரணத்துக்காக என் மகனை அடித்தார்கள்?  என் மகனை அடிக்க சொன்னது யார்?.. நிகிதா சொல்லி பெரிய இடத்திலிருந்து உத்தரவு வந்ததால்தான் என் மகனை அடித்ததாக அந்த போலீஸ்காரர்கள் சொல்கிறார்கள்?.. யார் அந்த பெரிய இடம்?.. அதுபற்றி எனக்கு தெரிய வேண்டும்.. ஒரு தவறும் செய்யாத அப்பாவியை மிளகாய் பொடி தூவி, தண்ணீர் கூட கொடுக்காமல் கொடூரமாக அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள்..

ajith

இதற்கெல்லாம் சட்டத்தில் இடம் இருக்கிறதா?.. என் மகன் என்ன தீவிரவாதியா?.. சிறுநீரை கூட வலுக்கட்டாயமாக வரவழைத்திருக்கிறார்கள்?.. என் மகன் கூனிக்கூறுகி இறந்து போயிருப்பான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரையும் தண்டிக்கவேண்டும்’ என கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருக்கிறார்.