பணியிடமாற்றம் செய்ததில் 365.84 கோடி லஞ்சம்!.. கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை புகார்...
திமுக ஆட்சியில் அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. தமிழக நகராட்சி நிர்வாகத் துறையை கையில் வைத்திருக்கும் அவர் பணியிடங்களை நிரப்புவதில் நிறைய முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக அமலாக்கத்துறை ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே இரண்டு முறை தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது. ஆனால் இதுவரை தமிழக போலீசார் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. இரண்டாம் முறையும் அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.
அதன்பின் கே.என் நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மூன்றாவது முறையாகவும் அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கே.என்.நேருவின் சகோதரரான ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய சில இடங்களில் சோதனை செய்தார்கள்.
அப்போது பல முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினார்கள். நகராட்சிகளில் 2538 பணியாளர்களை நிரப்புவதில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அதில் 150 பேருக்கு 25 முதல் 35 லட்சம் லஞ்சம் பணம் கைமாறியிருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.
அமைச்சர் கே.என் நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில் பணியிட மாற்றங்களுக்கு 365 கோடி 87 லட்சம் லஞ்சம் கை மாறியிருப்பதாக தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருக்கிறது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.