1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (11:44 IST)

யாருக்கு ஆதரவு? - அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் பேட்டி

தினகரன் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அனைவரையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அழைத்து பேச வேண்டும் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 

 
அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் ஆகியோர் இனைந்த அணி, தினகரன் அணி என இரண்டாக பிரிந்துள்ளது. இதில், கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி  கட்சியாக போட்டியிட்ட வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோரின் நிலைப்பாடு என்னவென்று இதுவரை தெரியாமல் இருந்தது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் மூன்று பேரும் கூறியதாவது:
 
பாஜகவின் சூழ்ச்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் அதிமுக அரசு இரையாகக்கூடாது. பாஜகவின் அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் முதல்வர் செயல்பட வேண்டும். அதிமுகவில் பிளவுபட்டிருக்கும் அணிகள் ஒன்றுபட வேண்டும்.. சசிகலாவை நீக்கினால் அது பல பின்விளைவுகளை ஏற்படுத்தும். டிடிவி தினகரன் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து பேச வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் யாருக்கு ஆதரவு என்பதை பின்னர் பேசி முடிவெடுப்போம்..
 
அதிமுக ஆட்சியில் யார் முதல்வர் யார் என்பதை தொண்டர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அதை பாஜக முடிவு செய்யக்கூடாது. திமுக தலைவர்களும், அதிமுகவுடன் இதுபற்றி ஆலோசித்து ஒன்று பட்டு செயல்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏனெனில், இப்போது அதிமுகவை அழிப்பார்கள். பின்னால் திமுகவை அழிப்பார்கள்” என அவர்கள் பேசினர். மேலும், விரைவில் அவர்கள் மூவரும் முதல்வரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.