வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 24 பிப்ரவரி 2021 (12:36 IST)

அதிமுகவில் அதிக அளவில் ராமர்கள் உள்ளார்கள் - ஜெயகுமார்!

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஜபதி தெருவில் உள்ள அம்மா மினி கிளினிக் கட்டிடத்தை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா மினி கிளினிக் திட்டத்தின் மூலம் ஒரு நாளைக்கு சராசரியாக 50 முதல் 100 பேர் வரை பயன்பெறுகின்றனர் என்றும் இதுவரை சென்னையில் 149 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 51 மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
 
புதுச்சேரியில் நடைபெற்று வரும் தற்போதைய அரசியல் நாடகம் தமிழகத்திற்கான ஒத்திகை என்ற திருமாவளவன் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், திமுக-காங்கிரஸ் கூட்டணி என்பது தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னாலேயே உடைந்து விடலாம் என்றும் திமுக காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் உறுதித்தன்மையற்று இருப்பதால்தான் புதுவையில் தற்போது காங்கிரஸ் அரசு கவிழ்ந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் திமுகவில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளது என்றும் திமுகவில் உள்ள பல மூத்த தலைவர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்றும் உதயநிதிஸ்டாலின், கனிமொழி தயாநிதி மாறன் போன்றவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக குற்றம் சாட்டினார்.
 
ஓபிஎஸ் குறித்த டிடிவி தினகரனின் கருத்திற்கு ராவணனுக்கு தான் ராவணன் பற்றிய சிந்தனைகள் இருக்கும் என்றும் அதிமுகவில் அதிக அளவில் ராமர்கள் நிறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும் டிடிவி தினகரனின் கனவு என்றுமே பலிக்காது என்றும் தெரிவித்தார். 
 
சகாயம் ஐஏஎஸ் அவர்களின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு முதலில் அவர் கட்சி தொடங்கட்டும் என்றும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் உரிய நேரத்தில் கட்சித் தலைமை அதனை முறைப்படி அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.