வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (19:11 IST)

மாற்றம், முன்னேற்றமா? எல்லாம் வெறும் ஏமாற்றம்: ரஞ்சித் கடும் தாக்கு

அதிமுக - பாமக கூட்டணி குறித்து பல கடுமையான விமர்சங்களை சந்தித்து வருகிறது. ஏற்கனவே, பாமக இளைஞர் அணி தலைவர் விலகியுள்ள நிலையில் தற்போது அந்த கட்சியின் மாநில துணைத் தலைவரும் நடிகருமான ரஞ்சித் பாமகவில் இருந்து விலகியுள்ளார்.
 
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு, 8 வழி சாலை திட்டத்திற்கு எதிராக மக்களிடம் சென்று கையெழுத்து இயக்கம் நடத்தி 8 வழி சாலை வரக்கூடாது என்று அரசுக்கு எதிராக வழக்கு தொடர் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 
 
மதுக்கடைகளுக்கு எதிராக போராடி விட்டு டாஸ்மாக் விற்பனையை நடத்துவோருடன், எவ்வாறு கூட்டணி சேர முடியும்? குட்கா ஊழல் மற்றும் பல அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு, மாறி மாறி முதல்வரையும், அமைச்சர்களையும் மிக மோசமான வார்த்தைகளில் விமர்சனம் செய்து விட்டு இப்போது அவர்களுடன் கூட்டணி வைக்கலாமா? இது என்ன கொள்கை?
ஒரு நொடியாவது பாமக மக்களை நினைத்து பார்த்தாரா? நான் துணைத்தலைவர் பதவியில் இருக்கிறேன் என்பதற்காக 4 பேருக்கு கூஜா தூக்கி வாழ முடியாது. தப்பு யார் செய்தாலும் தப்புதான். நல்ல கொள்கைகள் உள்ள கட்சியில் இணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதுதான் எனது நீண்டகால எண்ணம்.
 
அந்த வகையில்தான், நான் பாமகவின் கொள்கைகள், செயல்பாடுகளைப் பார்த்து ஈர்க்கப்பட்டு, அந்த கட்சியில் இணைந்தேன். தினமும் ஒரு சட்டை மாற்றுவது போல, கொள்கைகளை விற்பனை செய்வது என்பது ஜீரணிக்க முடியாத விஷயம். மாற்றம், முன்னேற்றம் என கூறி கடைசியில் ஏமாற்றம்தான். 
யாரை எதிர்த்து போராடுவோம் என்று கூறினோமோ, அவர்கள் காலையே கட்டிப்பிடித்து, ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதை என்னால் ஜீரணிக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான அரசியல் எனக்கு வேண்டாம். எனவே, நான் மாநில துணைத்தலைவர் பதவி மட்டுமின்றி, பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.