வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (19:47 IST)

ஆதார் எண் கட்டாயமில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அரசின் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.


 
2 வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள அனைவரும் ஆதார் எண்ணை பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆதார் அட்டை இல்லையெனில், அரசு நலத்திட்டங்கங்கள் கிடைக்காது என பயமுறுத்தியதால், பெரும்பாலானோர் ஆதார் அட்டையை பெற்றுவிட்டனர். இதுவரை சுமார் 80 கோடி பேர் ஆதார் அட்டையை பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது.
 
அதுபோக, கேஸ் இணைப்பு, வங்கி கணக்கு, தொலைப்பேசி எண் இணைப்பு, பான் கார்டு  என அனைத்தையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதுவும் டிசம்பர் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என அறிவிப்புகள் வெளியானது. அதன் பின் 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
 
இந்நிலையில்,  அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
 
அந்த விசாரணை தொடர்பான தீர்ப்பு இன்று காலை 10.30 மணியளவில் வெளியானது. அதில், ஆதார் எண்ணை கட்டாயமாக்குவதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தனர்.
 
மேலும்,  மக்களின் விருப்பத்தின் பேரிலேயே வங்கி கணக்கு, செல்போன் உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்காலாமே தவிர, மத்திய அரசு கட்டாயப்படுத்தக்கூடாது. முக்கியமாக, அரசின் நலத்திட்ட உதவிகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற அதிரடி தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கினார்.
 
அதேநேரம், ஆதார் எண்ணை இணைக்க 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனாலும், ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமா இல்லையா என்பது மார்ச் 31ம் தேதிக்குள் தெரியவரும்.