1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (09:46 IST)

பற்றி எரியும் மணிப்பூர்; ரயில்கள் ரத்து! கண்டதும் சுட உத்தரவு!

Manipur Violence
மணிப்பூரில் இரு பிரிவினரிடையே எழுந்த மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.

மணிப்பூரில் சில மாவட்டங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் மெய்டீஸ் சமூகத்தினர் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் கடந்த சில காலமாகவே இரு பிரிவினர் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது.

இந்நிலையில் மணிப்பூர் பட்டியலின மாணவ அமைப்பினர் நடத்திய ஒற்றுமை பேரணியில் வெடித்த கலவரம் மணிப்பூரையே தீக்கிரையாக்கியுள்ளது. இரு பிரிவினருக்கிடையே மோதல் வெடித்த நிலையில் வீடுகள், கடைகள் தீ வைக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த அசாம் ரைபிள் படை, ராணுவம், மணிப்பூர் போலீஸார் களமிறங்கியுள்ளனர். 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை காரணமாக மணிப்பூர் மற்றும் மணிப்பூர் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. கலவரம் நடந்து வரும் மாவட்டங்களில் போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டுள்ளதுடன், 5 நாட்களாக இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K