ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (11:10 IST)

தண்ணீர் குழாயில் வந்த மதுபானம் – கேரளாவில் ஆச்சர்ய சம்பவம்!

தண்ணீர் குழாயில் மது
கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் குழாயில் மதுபானம் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள சாலக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜோசி. அடுக்குமாடி குடியிருப்பு கட்டி அதை வாடகைக்கு விட்டுள்ளார். அவரது அடுக்குமாடி வீட்டில் குடியிருப்பவர்கள் குழாயில் வரும் தண்ணீரில் மதுவாடை அடிப்பதாக புகார் அளித்துள்ளனர். குடியிருப்புக்கு தேவையான தண்ணீர் அருகில் உள்ள கிணற்றில்தான் எடுக்கப்படுகிறது என்பதால் ஜோசி கிணற்றை ஆராய்ந்த போது அதில் மதுவாடை வீசியுள்ளது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிணற்று தண்ணீரில் மது கலந்தது கலால் துறை அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியில் சட்ட விரோதமாக நடந்த பார் ஒன்றை சீல் வைத்த அதிகாரிகள் அங்கு கைப்பற்றப்பட்ட 6 ஆயிரம் லிட்டர் மதுவை குழிதோண்டி ஊற்றியுள்ளனர்.  அந்த பகுதிக்கு அருகில்தான் குடியிருப்பு பகுதியின் கிணறு உள்ளதால் நீண்ட ஆண்டுகள் கழித்து கிணற்று நீரோடு மது கலந்து மாசுப்பட்டுள்ளது. இதுகுறித்து கலால் துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்கவும், குடியிருப்புவாசிகளுக்கு தண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்யவும் துணை ஆணையர் உறுதி அளித்துள்ளார். இந்த சம்பவம் திரிச்சூர் பகுதியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.