1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (13:45 IST)

வரியா.. அப்படின்னா? கூலி தொழிலாளிக்கு 2.59 லட்சம் வரி விதிப்பு!

வங்கி பக்கமே செல்லாத கூலி தொழிலாளி ஒருவருக்கு 2.59 லட்சம் ரூபாய் வருமானவரி கட்ட சொல்லி கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புஜாரி பராந்தி கிராமத்தை சேர்ந்தவர் சோனதர் கோந்த். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சமீபத்தில் சோனதருக்கு வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து கடிதம் வந்துள்ளது. எழுத படிக்க கூட தெரியாத அவர் வேறு ஒருவரிடம் அதை கொடுத்து படிக்க சொல்லி கேட்டபோது அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

கோரபுட் வருமானவரித்துறை அலுவலகத்திலிருந்து வந்த அந்த கடிதத்தில் கடந்த 2013-2014ம் ஆண்டு சோனதர் தனது வங்கி கணக்கிலிருந்து 1.47 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்துள்ளதாகவும், அதற்கு வரியாக 2.59 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது பெயரில் வங்கி கணக்கு இருப்பதே சோனதருக்கு அப்போதுதான் தெரிந்துள்ளது.

வணிகர் ஒருவரிடம் கடந்த 7 ஆண்டுகளாக வேலை பார்த்து வரும் சோனதர் வணிகரின் மகனிடம் தனது ஆதார் எண், கைரேகை பதிவு ஆகியவற்றை கொடுத்ததாக கூறியுள்ளார். எனவே சோனதர் பெயரில் மோசடி நடந்திருக்கலாம் என பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.