1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Honest constable arrested for non constitutional activities

முதல்நாள் நேர்மைக்கான விருது: மறுநாள் லஞ்சம் வாங்கி கைது – தெலுங்கானாவின் பலே போலீஸ்

National News
தெலுங்கானா மாநிலத்தில் சிறந்த காவலருக்கான விருது பெற்ற மறுநாளே லஞ்சம் வாங்கி கைதான போலீஸ் குறித்த செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தெலுங்கானாவில் உள்ள மகபூப் நகர் காவல் நிலையத்தில் பணிபுரிபவர் கான்ஸ்டபிள் திருப்பதி ரெட்டி.. ஆகஸ்டு 15ம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் “நேர்மையான காவல் அதிகாரி” என்ற விருதினை அமைச்சர் சீனிவாச கௌடா கைகளால் பெற்றுக்கொண்டார்.

ஆனால் பெயருக்கேற்றவாரே பணப்புழக்கம் அதிகம் உள்ள கான்ஸ்டபிளாக இருந்துள்ளார் திருப்பதி ரெட்டி. மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு அவர்களை கண்டுகொள்ளாமல் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். முறையான அனுமதியோடு மணல் அள்ளுபவர்களையும் இவர் விட்டுவைப்பதில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை முறையான அனுமதியோடு மணல் அள்ள சென்ற ஒருவரை திருப்பதி லஞ்சம் கேட்டு மிரட்டியிருக்கிறார். தர மறுத்தால் போலியான வழக்குகளை ஜோடனை செய்து சிறைக்கு அனுப்பிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த நபர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தெரிவித்துள்ளார்.

அவர்கள் கொஞ்சம் பணம் கொடுத்து அதை திருப்பதியிடம் கொடுக்குமாறு சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். காவல் நிலைய வளாகத்தில் அந்த பணத்தை வாங்கி கொண்டு சென்றிருக்கிறார் திருப்பதி. பணம் கிடைத்த சந்தோஷத்தில் உள்ளே சென்ற திருப்பதியை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் கையும், பணமுமாக பிடித்தார்கள். இதுபோன்று லஞ்சம் வாங்குவதை பலநாள் வழக்கமாக திருப்பதி மேற்கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேர்மையற்ற அதிகாரிகளுக்கு எப்படி இதுபோன்ற உயரிய விருதுகள் கொடுக்கப்பட்டன? எதை வைத்து அவர்கள் நேர்மையான அதிகாரிகள் என மக்கள் தேர்வு செய்கின்றனர் என மக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
சென்னையை புரட்டியெடுக்கும் மழை: வானவில் பார்த்து மக்கள் மகிழ்ச்சி