வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (17:34 IST)

வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸை காப்பாற்றிய சிறுவன் – குவியும் பாராட்டுகள்

கர்நாடகாவில் வெள்ள நீரில் சிக்கி கொண்டு தவித்த ஆம்புலன்ஸுக்கு வெள்ளத்தில் நீந்தி சென்று வாழிகாட்டி அதில் இருந்தோரை காப்பாற்றிய சிறுவனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகள் கனமழையால் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. யாத்கிர் மாவட்டத்தின் மச்சனூர் பகுதியும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் இறந்த ஒரு பெண்ணின் சடலத்தையும், அவசர சிகிச்சைக்காக ஆறு சிறுவர்களையும் தாங்கி கொண்டு ஆம்புலன்ஸ் ஒன்று பயணித்து கொண்டிருந்தது.

மொத்த பகுதியும் வெள்ளக்காடாக இருந்ததால் எது சாலை? எது பள்ளம்? என்று தெரியாமல் ஆம்புலன்ஸ் வெள்ளத்தில் சிக்கி கொண்டது. அப்போது 6ஆம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ் என்ற சிறுவன் அவர்களுக்கு உதவ முன் வந்தான். ஆம்புலன்ஸுக்கு முன்னால் நீந்தி சென்ற அவன் பள்ளம், மேடுகளை ஆராய்ந்து வழிநடத்தினான். சிறுவனின் சமயோஜித செயலால் ஆம்புலன்ஸ் பத்திரமாக கரை சேர்ந்ததோடு மட்டுமல்லாமல், அதில் உள்ள ஆறு குழந்தைகளும் காப்பாற்றப்பட்டன.

சிறுவன் ஆம்புலன்ஸுக்கு முன்னால் நீந்தி வந்து வழிநடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனது. பலரும் அந்த சிறுவனின் வீர செயலுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் அந்த சிறுவனின் சமூக அக்கறையை பாராட்டி வீரதீர செயல்களுக்காக கர்நாடகாவில் வழங்கப்படும் சௌரியா விருதை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.