வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (08:30 IST)

ஜி20 நாடுகளுக்கு தலைவராகும் இந்தியா… அடுத்த ஆண்டு மாநாடு!

G20
ஜி20 நாடுகளுக்கான தலைவராக இந்தியா பொறுப்பேற்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது.

உலக பொருளாதாரத்தில் வளர்ந்த மற்றும் வளரும் 20 நாடுகள் சேர்ந்த அமைப்பு ஜி20 எனப்படுகிறது. இந்த அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும், இந்தியா, இந்தோனேஷியா, அர்ஜெண்டினா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகளும் என மொத்தம் 20 நாடுகள் உறுப்பினர்களாய் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு இந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும். ஒரு ஆண்டு காலம் குறிப்பிட்ட நாடு தலைவராக பதவி வகிக்கும்போது ஜி20 ஆண்டு உச்சி மாநாடு அந்நாட்டில் நடைபெறும். தற்போது ஜி20 அமைப்பின் தலைவராக உள்ள இந்தோனேஷியா நவம்பர் 15ல் மாலியில் உச்சி மாநாட்டை நடத்துகிறது.


அதன்பின்னர் அடுத்த ஆண்டிற்கான ஜி20 நாடுகள் அமைப்பின் தலைவராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் 1 தொடங்கி அடுத்த ஆண்டு நவம்பர் 30 வரை இந்தியா இந்த பதவியில் இருக்கும்.


இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜி20 அமைப்பின் தலைவராக மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள், நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் வளரும் நாடுகளான இந்தியா. பிரேசில், இந்தோனேசியா நாடுகளை இணைத்து முக்கூட்டமைப்பு ஒன்றும் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் ஜி20 தொடர்பான கூட்டங்களை நடத்துவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு செப்டம்பரில் உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.