1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (13:10 IST)

EPFO-வில் அதிக ஓய்வூதியம் பெறலாம்! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

EPFO
வருங்கால வைப்புநிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) ஊழியர்கள் பெறும் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்து, அதற்கு நிகரான தொகையை பணியாற்றும் நிறுவனத்திடமிருந்தும் பெற்று வருங்கால வைப்புநிதி கணக்கில் வரவு செய்கிறது. இவ்வாறு வரவு செய்யப்படும் தொகையில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்திற்கும், 3.7 சதவீதம் வைப்பு நிதியாகவும், 0.50 சதவீதம் காப்பீட்டிற்கும் செலுத்தப்படுகிறது.

இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் பென்சன் பெற அதிகபட்ச சம்பள வரம்பு ரூ.6,500 ஆக இருந்த நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்காக சமீபத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக ஓய்வூதியம் பெற 2014க்கு முன்பு வைப்புநிதி கணக்கில் சேர்ந்தவர்கள் தங்கள் ஊதியத் தொகையில் 8.33% பணியாளர் பங்காககவும், தனியார் நிறுவனங்கள் அதே அளவு தொகையை செலுத்தியும் விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்காக விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை சமீபத்தில் வருங்கால வைப்புநிதி அமைப்பு வெளியிட்டிருந்தது. ஆனால் கால அவகாசம் மார்ச் 3ம் தேதி வரையே அளிக்கப்பட்டிருந்தது. ஒரு வார காலமே அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த பலரும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்பேரில் தற்போது புதிய அறிவிப்பை வருங்கால வைப்புநிதி அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கூடுதல் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் அதற்காக விண்ணப்பிக்க மே 3ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க https://www.epfindia.gov.in/site_en/index.php என்ற இணையதள முகவரியில் செல்லவும்.

Edit by Prasanth.K