மின்வாரிய அதிகாரியிடம் ரூ.150 கோடி சொத்து: அவ்வளவும் லஞ்சப்பணமா?
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மின்சார வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்த அம்பேத்கர் என்பவர், வருமானத்திற்கு அதிகமாக ரூ.150 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கூறி, லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்குவதில் வேண்டுமென்றே தாமதம் செய்து, அதற்காக பல நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றதாக அம்பேத்கர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் என பல இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அவரது பினாமியான சதீஷ் என்பவரின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சோதனையில், அம்பேத்கர் மற்றும் அவரது பினாமிகளின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.150 கோடி என தெரியவந்துள்ளது. இந்த சோதனைகளை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறையினர் அம்பேத்கரைக் கைது செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran

