வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (08:42 IST)

பீகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி: உறுதி செய்த அமித்ஷா

பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து இப்போதே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டன. கடந்த சில மாதங்களாக பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது அங்கு சட்டசபை தேர்தலை நிதிஷ்குமாரின் கட்சியுடன் இணைந்து சந்திக்க உள்ளதாக உள்துறை அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான அமித்ஷா அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் 
 
முத்தலாக், காஷ்மீர் உள்பட ஒரு சில விவகாரங்களில் பாஜகவிற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிதிஷ்குமாரின் கட்சி, பாஜக உடன் கூட்டணி அமைக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சமாளிக்க பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது சரியானது என நிதிஷ்குமார் மற்றும் பாஜக தரப்பில் முடிவு செய்துள்ளனர் 
 
இதனை அடுத்து சமீபத்தில் பேட்டியளித்த அமித்ஷா அவர்கள் ’கூட்டணியில் எப்போதும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும், ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்கும் என்றும் நிதிஷ்குமாரின் கட்சியுடன் இணைந்து வரும் சட்டசபை தேர்தலை சந்தித்து ஆட்சியை பிடிப்போம் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பீகார் தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இணைந்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது