"சாரி மம்மி, சாரி டாடி”. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த கணினி அறிவியல் மாணவி..!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில், ஜார்க்கண்டை சேர்ந்த 20 வயது பொறியியல் மாணவி பிரின்சி குமாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வந்த அவர், தனது விடுதி அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சனிக்கிழமை இரவு அவரது பெற்றோர் பலமுறை அழைத்தும் பிரின்சி பதிலளிக்காததால், விடுதி காப்பாளர் மூலம் அறை சோதிக்கப்பட்டபோது இந்த விபரம் தெரியவந்தது.
முதற்கட்ட விசாரணையில், முதலாம் ஆண்டில் ஐந்து பாடங்களில் இருந்த அரியர் சுமை மற்றும் கல்வி அழுத்தம் காரணமாக அவர் மனமுடைந்திருந்தது தெரியவந்துள்ளது. மாணவியின் அறையில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை கடிதத்தில், "சாரி மம்மி, சாரி டாடி.. உங்கள் எதிர்பார்ப்புகளை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை" என்று உருக்கமாக எழுதியுள்ளார்.
மேலும், தனது படிப்புக்காக பெற்றோர் செலவழிக்கும் பணம் குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ராய்கர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Edited by Siva
