1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (17:35 IST)

அனுமதியின்றி கூட்டம்..! பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு..!

Pal Kanagaraj
பா.ஜ.க சார்பில் வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பால் கனகராஜ் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் திருவிழா உச்ச கட்டத்தை எட்டி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  
 
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்தலில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கும் நோக்கத்தில், பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லாத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, வடசென்னை தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் பால் கனகராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் - நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் (23-ம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு உரிய அனுமதி வாங்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆனால், இந்த கூட்டத்தில் 200 ஆண்கள், 50 பெண்கள் என 250 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.


அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவது குறித்து ஆர்.கே.நகர் தேர்தல் பறக்கும்படை அதிகாரி செல்வ வெங்கடேஷ், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக பால்கனகராஜ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.