1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (15:08 IST)

கார்த்திக் சிதம்பரத்துக்கு ஆதரவு – சுதர்சன நாச்சியப்பன் திடீர் பல்டி !

தனக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்த சுதர்சன நாச்சியப்பன் இப்போது திடீரென கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் பாமக, பாஜக, மற்றும் தேமுதிக ஆகியக் கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவித்த நிலையிலும் காங்கிரஸ் மட்டும் அறிவிக்காமல் தாமதம் காட்டியது.

ஒருவழியாக வேட்பாளர் பட்டியலை அறிவித்த காங்கிரஸ் சிவகங்கை தொகுதியை மட்டும் விடுத்து மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. அதற்குக் காரணம் சிவகங்கை தொகுதியை தனது மகனுக்குக் கொடுக்கவேண்டுமென முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் கொடுத்த அழுத்தமே. ஆனால் காங்கிரஸோ ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்குவது என்ற முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்பட்டது.இதனால் கார்த்திக் சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் இடையே போட்டி நிலவுவதாக பேச்சு எழுகிறது.

சிதம்பரம் தனது மகனுக்கு சீட் தரவில்லையெனில் தான் கட்சியை விட்டு விலகுவேன் என்று கூறியதை அடுத்து காங்கிரஸ் பணிந்து கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் கொடுத்தது. அதனால் சுதர்சன நாச்சியப்பன் அதிர்ச்சியடைந்து தனது அதிருப்தியினை வெளிப்படுத்தினார். இதையடுத்து காங்கிரஸார் அவரை சமாதானப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் காங்கிரஸின் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட சுதர்சன நாச்சியப்பன் கர்த்தி சிதம்பரத்தை சந்தித்து ஆதரபு தெரிவித்துள்ளார். அப்போது ‘ சிவகங்கையில் காங்கிரஸ் வலுவாக உள்ளது. ராகுலை பிரதமராக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருக்க வேண்டும். மக்களின் கஷ்டங்களை நீக்கும் ஆட்சி மத்தியில் வர வேண்டும். 100 ஆண்டுகளாக காங்கிரஸ் தொண்டர் குடும்பம் என்ற முறையில் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றேன்.’ எனக் கூறியுள்ளார்.