1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (08:00 IST)

புஜாரா ரஹானேவே ரஞ்சி கோப்பை ஆடுறாங்க… உங்களுக்கு என்ன?- இஷான் கிஷானை வெளுக்கும் சஞ்சய் மஞ்சரேக்கர்!

கடந்த மாதம் நடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த இஷான் கிஷான் மனச்சோர்வு என்று சொல்லி அந்த தொடரில் இருந்து விடுப்பு கேட்டு வெளியேறினார். அதன் பின்னர் தற்போது நடந்து வரும் ரஞ்சி கோப்பை தொடரிலும் விளையாடவில்லை.

இஷான் கிஷான் மீண்டும் அணியில் இணைவது சம்மந்தமாக பேசிய பயிற்சியாளர் டிராவிட், “இஷான் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டுமென்றால், அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போதுதான் அவர் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுவார்” எனக் கூறியிருந்தார். இதன் மூலம் இப்போதைக்கு இஷான் கிஷான் மேல் தேர்வுக்குழுவினரின் பார்வை இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

ஆனால் ரஞ்சி கோப்பையில் விளையாடாமல் அவர் ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை இப்போது தொடங்கியுள்ளார். இது பிசிசிஐக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருக்கும் ஒரு வீரர் இந்திய அணியின் பயிற்சியாளர் அறிவுரை இல்லாமல் இதுபோல தனியாக பயிற்சியில் ஈடுபடக் கூடாது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ இஷான் கிஷானின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் இஷான் கிஷானை விமர்சிக்கும் விதமாகப் பேசியுள்ளார். அதில் “புஜாரா மற்றும் ரஹானே போன்ற மூத்த வீரர்களே ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறார்கள். இளம் வீரர்கள் ஐபிஎல் தொடர் மட்டும் விளையாடிவிட்டு இந்திய அணியில் இடம்பிடிக்கலாம் என நினைத்தால் அது தவறு. முழு உடல் தகுதியோடு இருக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும். இது குறித்து தேர்வுக்குழு கடுமையான எச்சரிக்கையை வழங்கவேண்டும்” எனக் கூறியுள்ளார்.