1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (11:12 IST)

மீண்டும் மீண்டுமா?... ரிஷப் பண்ட்டுக்கு மிகப்பெரிய தொகை அபராதம்!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது அணியாக சாதனை படைத்தது. இந்த இன்னிங்ஸில் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை குவித்துள்ளது.

இதையடுத்து 273 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 166 ரன்கள் மட்டுமே சேர்த்து 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இந்த போட்டியில் கே கே ஆர் அணி பேட் செய்யும் போது அந்த அணியின் அனைத்து பேட்ஸ்மேன்களுமே காட்டடி அடித்து டெல்லி அணி பவுலர்களின் நம்பிக்கையை நிலைகுலைய செய்தனர்.

இதனால் எந்த பவுலரை பயன்படுத்துவது எப்படி பீல்ட் செட் செய்வது என அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் குழம்பிப் போனார். இதனால் அவரால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் 24 லட்ச ரூபாய் அபராதமாக விதித்துள்ளது. ஏற்கனவே அவருக்கு 12 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.