1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (11:46 IST)

விடாமுயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்! கோப்பையுடன் நடராஜன் – மகிழ்ச்சி ட்வீட்

நேற்றைய இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றியை கைப்பற்றிய நிலையில் மகிழ்ச்சியில் ட்வீட் செய்துள்ளார் தமிழக வீரர் நடராஜன்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்தியா 48 ஓவர்களுக்கு 329 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவதாக களமிறங்கிய இங்கிலாந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இங்கிலாந்தின் இளம் வீரரான சாம் கர்ரன் தோல்வியடைய இருந்த இறுதி தருவாயிலும் தொடர்ந்து உறுதியாக விளையாடி 95 ரன்களை குவித்தார். இந்நிலையில் இறுதியில் பவுலிங் செய்த தமிழக வீரர் நடராஜன் தனது யாக்கரால் இங்கிலாந்தை திணற செய்ய 50 ஓவர்களுக்கு 322 ரன்களில் இங்கிலாந்து தோல்வியை அடைந்தது. இந்நிலையில் தொடரை வென்ற இந்தியாவின் கோப்பையுடன் போஸ் கொடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடராஜன் “விடாமுயற்சி இருந்தால் இலக்கை அடையலாம். தொடர்ந்து நிலைத்தன்மை இருந்தால் வெல்லலாம். வாழ்த்துக்கள் இந்தியா” என பதிவிட்டுள்ளார்.