பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!
ஐபிஎல் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தங்கள் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
முதலில் பேட் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் சேர்த்தது. அதன்பின்னர் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணியின் மூத்த வீரரான தோனி 30 ரன்கள் விளாசி கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டினார்.
இந்த போட்டியில் ஆர் சி பி அணி பேட் செய்த போது பதிரனா வீசிய பவுன்சர் பந்து கோலியின் ஹெல்மெட்டைப் பதம் பார்த்தது. இதையடுத்து அவருக்கு கன்கஷன் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அடுத்து பதிரனா வீசிய பவுன்சரை கோலி சிக்ஸருக்கு பறக்கவிட்டார். அதற்கடுத்த பந்தையும் பவுண்டரிக்கு பறக்கவிட்டு ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.