1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

ரிஷப் பண்ட்டுக்கு ஏற்பட்டு இருக்கும் விபத்து பாடமாக இருக்கட்டும்… கபில்தேவ் கருத்து!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ரிஷப் பண்ட்டின் விபத்து குறித்து பேசியுள்ளார்.

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் நேற்று அதிகாலை காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பண்ட்டின் விபத்து பற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ் “இந்த விபத்து மற்ற வீரர்களுக்கு பாடமாக இருக்கட்டும்” எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “நானும் இதுபோல இளம் வயதில் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்துக்குள்ளானேன். அன்று முதல் என் சகோதரர் என்னை வண்டியை தொடவே விடமாட்டார். இப்போதுள்ள வீரர்களிடம் அழகான கார்கள் உள்ளன. அவற்றுக்கு நீங்கள் திறமையான ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும்.  ஆனால் நீங்கள் பொழுதுபோக்குக்காக இப்படி செய்கிறீர்கள். உங்களுக்கு பொறுப்புகள் இருக்கின்றன. உங்களால்தான் உங்களைப் பொறுப்பாக பார்த்துக்கொள்ள முடியும்” எனக் கூறியுள்ளார்.