1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 27 ஜனவரி 2024 (07:47 IST)

சதத்தை நழுவ விட்டேனா… அதெல்லாம் மேட்டரே இல்ல… இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் பதில் இதுதான்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று ஹைதராபாத் மைதானத்தில் தொடங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் 421 ரன்கள் சேர்த்து முன்னிலை பெற்றுள்ளது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 64 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பதும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடிய 70 ரன்கள் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் ஆடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 80 ரன்களும், கே எல் ராகுல் 86 ரன்களும், ஜடேஜா அவுட்டாகாமல் 81 ரன்களும் சேர்த்து இந்திய அணிக்கு வலுசேர்த்தனர். இந்நிலையில் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவுட்டானது குறித்து பேசியுள்ளார்.

அதில் “நான் சதத்தை தவறவிட்டது வருத்தம்தான். ஆனால் நான் அணியின் ரன்களை உயர்த்த விரும்பினேன். அதை நான் சிறப்பாக செய்தேன்.இந்திய மண்ணில் எனது முதல் டெஸ்ட் போட்டி இது. சிறப்பாக விளையாட வேண்டும் என நினைத்தேன். நாட்டுக்காக ஆடும் போது எனக்கு பெருமையாகவும், கௌரவமாகவும் உள்ளது” எனக் கூறியுள்ளார்.