1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 29 ஜூன் 2024 (08:43 IST)

உங்கள் குப்பையை நீங்களே வைத்துக் கொண்டு அடுத்த வேலையைப் பாருங்கள்- இங்கிலாந்து வீரரை சாடிய ஹர்பஜன் சிங்!

நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து வீழத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று 2022 ஆம் ஆண்டு அடைந்த் தோல்விக்குப் பழிதீர்த்துள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. அதையடுத்து இங்கிலாந்து அணி ஆரம்பம் முதலே தடுமாறி விக்கெட்களை இழந்தது.இந்திய அணியின் ஸ்பின்னர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த போட்டியில் எல்லா வகையிலும் இந்திய அணி இங்கிலாந்தை விட சிறப்பாக செயல்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைகேல் வாஹ்ன் இந்த போட்டி குறித்து பேசும்போது “இங்கிலாந்து எந்தவகையிலும் மோசமான அணியில்லை. இந்த போட்டி கயானாவில் நடந்தததால்தான் இந்தியா வெற்றி பெற்றது” என்பது மாதிரியும் பேசியிருந்தார்.

அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் “இரண்டு அணிகளுக்கும் ஒரே ஆடுகளம்தானே வழங்கப்பட்டது. போட்டியில் டாஸ் வென்றது கூட இங்கிலாந்துக்கு சாதகமாகதானே அமைந்தது. அதனால் முட்டாள்தனமாக பேசுவதை நிறுத்துங்கள். இந்தியா எல்லாவகையிலும் இங்கிலாந்தை விட சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. அதை ஏற்றுக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகருங்கள். உங்கள் குப்பைகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாவது தர்க்க ரீதியாக பேசுங்கள்.” என கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.