கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!
சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை மூன்றாவது முறையாக வென்றது. ஆனால் சமீபத்தில் நடந்த மெஹா ஏலத்தில் அவரை கொல்கத்தா அணி தக்கவைக்கவில்லை.
அதே போல சமீபகாலமாக போட்டிகளிலும் அவருக்கு தற்போது வாய்ப்புகள் அரிதாகி வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதன் பிறகு அவருக்கு போதுமான வாய்ப்புகள் அணியில் கிடைக்கவில்லை. டி 20 உலகக் கோப்பை தொடரில் கூட அவர் இடம்பெறவில்லை.
இந்நிலையில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம்பெற்ற அவர் மிகச்சிறப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்பட்டார். இந்த தொடரை இந்திய அணி வென்றதற்கு மிக முக்கியமானக் காரணிகளில் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒருவர். இதையடுத்து அவர் தற்போது மீண்டும் பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இணையவுள்ளார் என சொல்லப்படுகிறது. தற்போது பஞ்சாப் அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள அவர் முதல் போட்டியிலேயே மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் கங்குலி “கடந்த ஓராண்டில் அதிகமாக தன்னை மெருகேற்றிக் கொண்ட வீரர் என்றால் அது ஸ்ரேயாஸ் ஐயர்தான். அவர் மூன்று விதமானப் போட்டிகளிலும் விளையாடும் விதமாக தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அவரிடம் சில பந்துகளை ஆடுவதில் பிரச்சனை இருந்தது. ஆனால் இப்போது அவர் அதை எல்லாம் கடந்து வந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.