1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:57 IST)

அஸ்வினை எளிதாக ஆட்டத்தில் இருந்து புறந்தள்ளிவிட முடியாது… அனில் கும்ப்ளே பாராட்டு!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் தற்போது ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 152 ரன்களே தேவை. கைவசம் 10 விக்கெட்கள் உள்ளன. நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீசிய போது அஸ்வின்  5 விக்கெட்கள் அசத்தினார்.

இதன் மூலம் அவர்  இந்திய மைதானங்களில் 352 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே 350 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. நேற்று அஸ்வின் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 ஆவது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளேவும்  35 முறை இதே சாதனையைப் படைத்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே “அஸ்வின் போன்ற வீரரை நாம் எளிதாக ஆட்டத்தில் இருந்து புறம் தள்ளிவிட முடியாது. அவர் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி என்னுடைய சாதனை உள்ளிட்ட பல சாதனைகளை முறியடிக்க வேண்டும். அவரால் இன்னும் சில ஆண்டுகள் கண்டிப்பாக கிரிக்கெட் விளையாட முடியும்” எனக் கூறியுள்ளார்.