1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 13 ஜூலை 2020 (09:52 IST)

இரும்புக் கால மனிதனை கொன்றது யார்? - இரண்டாயிரம் ஆண்டுக்கால புதிர்

பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ரயில்வே பணியின் போது இரும்புகால மனிதனின் எலும்புக் கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அகழாய்வு நிபுணர்கள், இது கொலை செய்யப்பட்ட ஒரு மனிதனின் எலும்புக் கூடு என்கின்றனர்.

எங்கு...என்ன?

பிரிட்டன் பக்கிங்கம்ஷரில் வெண்டோவர் பகுதி அருகே உள்ள வெல்விக் பண்ணை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ரயில்வே கட்டமைப்பு பணியின் போது மனிதனின் எலும்புக் கூடு கிடைத்தது.

இதனை ஆய்வு செய்த வல்லுநர்கள், இந்த எலும்புக்கூடானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு ஆணுடையது என்று கூறுகின்றனர். மேலும் அவர்கள், அந்த ஆண் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்றும் கணிக்கின்றனர்.

இது குறித்து தொல்பொருள் வல்லுநர் ரேஷல் உட், ஏன் அவர் கொல்லப்பட்டார் என்பது மர்மமாகவே உள்ளது, இது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்கிறார்.

அந்த பகுதியில் ரோமானிய அடக்கத்தலம் ஒன்றும் ஸ்டோன்ஹெஞ்ச் பாணியிலான மர கட்டுமானம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பனிமனிதன் ஓட்ஸியை கொன்றது யார்? 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கு
5,300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனிமனிதன் கடைசியாக பயணித்த பாதை எது?
ரயில்வே பாதை அமைக்கவே முதலில் அங்கு குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கு புதிய கற்காலம் மற்றும் மத்தியகால பொருட்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன.

ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்

இந்த ஆய்வானது 4000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களை குறித்த ஒரு புரிதலை வழங்குவதாக கூறுகிறார் ஆய்வாளர் ரேஷல் உட்.

அதுமட்டுமல்லாமல் புதிய கற்காலத்தை சேர்ந்த 213 அடி விட்டம் கொண்ட வட்ட நினைவுச் சின்னமும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெண்கலக் காலத்திற்கும் இரும்பு காலத்திற்கும் மத்தியில் அந்த பகுதியில் நடந்த தொழில்கள் தொடர்புடைய ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார்கள் வல்லுநர்கள். வட்டவடிவிலான வீடுகள் மற்றும் விலங்கு குழிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ரோமானிய காலத்தில் சமூகத்தில் மதிப்புடையவர்களை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த ஈய சவப்பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மர்மம் விலகும்

இரும்புகால மனிதனின் எலும்புக் கூடு குறித்து பேசிய ரேஷல் உட், "ஏன் அவர் கொல்லப்பட்டார் என்பது மர்மமாகவே உள்ளது. நிச்சயமாக எலும்பியல் நிபுணர்கள் இந்த படுகொலைக்கான விடையை கண்டுபிடிப்பார்கள் என நினைக்கிறேன்," என்கிறார்.