வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 ஜூலை 2020 (08:41 IST)

ஐக்கிய அரபு அமீரக விண்கலம்: செவ்வாய் கோளை நோக்கி பயணத்தை தொடங்கியது

ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க செவ்வாய் கிரகம் செல்லும் விண்கலம் ஜப்பானிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்னும் இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் H2-A ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

இது செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும்.

கடந்த வாரமே இந்த விண்கலம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் மோசமான வானிலையால் விண்ணில் செலுத்தப்படவில்லை.

ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் செல்வது ஏன்?

விண்கலம் உருவாக்கத்தில் பெரிதாக அனுபவம் இல்லாத நாடு ஐக்கிய அரபு அமீரகம். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியவற்றின் விண்வெளி ஆய்வு முகமைகள் மட்டுமே சாதித்த ஒரு விஷயத்தை முயன்று பார்க்கிறது அமீரகம்.



அமெரிக்க வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்பட்ட அமீரகத்தின் பொறியாளர்கள் இந்த விண்கலத்தை ஆறுமாதத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தின் சூழல் குறித்து புதிய அறிவியல் தகவல்களை வழங்கும்.

தண்ணீரை உருவாக்கத் தேவையான ஹைட்ரஜன், ஆக்சிஜன் இரண்டுமே செவ்வாயில் இருந்து வெளியேறிக்கொண்டே இருப்பது எப்படி என்பதில்தான் அமீரகத்தின் இந்த நம்பிக்கை விண்கலம் அதிக கவனம் செலுத்தப் போகிறது.

எப்படி இதனை சாத்தியமாக்கியது அமீரகம்?

அமீரக அரசு தொடக்கத்திலேயே இந்த திட்டத்தில் தொடர்புடையவர்களிடம் ஒரு விஷயத்தை கூறிவிட்டது. அதாவது, இதற்கான விண்கலத்தை வெளியில் வாங்கப் போவதில்லை. இதனை நாமே உருவாக்கப் போகிறோம், இதற்கான அனுபவம் மற்றும் கல்விக்கு மட்டுமே வெளிநாடுகளை சார்ந்து இருக்கப் போகிறோம் என்பதுதான் அது.

இதற்காக அமெரிக்க பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அமீரகம் மற்றும் அமெரிக்க அறிவியலாளர்கள் இணைந்து பணியாற்றி இந்த விண்கலத்தை உருவாக்கி உள்ளனர்.

கொலராடோபல்கலைக்கழகத்தில் உள்ள விண்வெளி இயற்பியல் மையத்திலும், துபாயில் உள்ள முகமது பின் ரஷீத் விண்வெளி மையத்திலும் இந்த செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.