1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. Road accident in India

சைரஸ் மிஸ்திரி மரணம்: சாலை விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் கூறுவது என்ன?

மகாராஷ்டிர மாநிலம்
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி உயிரிழந்தார்.

 
அவருக்கு வயது 54. அவரது மரணம் சாலை விபத்துகள் பற்றிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவரது கார் சாலை டிவைடர் மீது மோதியதில் விபத்து நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி முகமை பிடிஐ தெரிவித்துள்ளது.

சைரஸ் மிஸ்திரி தனது மெர்சிடிஸ் காரில் அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டதாக அந்த அதிகாரி மேலும் கூறினார். "பிற்பகல் 3.15 மணியளவில் இந்த விபத்து நடந்தது. சூர்யா ஆற்றின் மீதுள்ள பாலத்தில் இந்த சம்பவம் நடந்தது. இது விபத்து போலத் தெரிகிறது" என்று பால்கர் காவல்துறை கண்காணிப்பாளர் பாலாசாகேப் பாட்டீல் கூறினார்.

கார் ஓட்டுநர் உட்பட மிஸ்திரியுடன் பயணித்த இருவர் காயமடைந்ததாக பாலாசாகேப் பாட்டீல் கூறினார். காயமடைந்தவர்கள் குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர்களிடம் இருந்து கூடுதல் தகவல்கள் பெறப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தங்கள் காவல் நிலையத்தின் கீழ் வரும் சூர்யா நதியின் பாலத்தில் உள்ள சரோடி நாகா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று காசா காவல் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். சைரஸ் மிஸ்திரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக காசா ஊரக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு மணிநேரத்துக்கு 18 பேர் பலி:
  • தொழில்துறையின் முக்கிய நபரான சைரஸ் மிஸ்திரி சாலை விபத்தில் உயிரிழந்திருப்பது, சாலை விபத்துகள் பற்றிய விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. அண்மையில் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு 18 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
  • அதாவவது அந்த ஆண்டு முழுவதும் 1.55 லட்சம் பேர் சாலை விபத்துகளால் உயிரைப் பறிகொடுத்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 326 பேர் சாலை விபத்துகளால் மரணமடைகிறார்கள். இதுவரை இந்தியாவில் சாலை மரணங்கள் அதிகமாகப் பதிவானது இந்த ஆண்டில்தான்.
  • சாலையில் பயணிக்கும் ஆயிரம் வாகனங்களில் 0.53 விகித உயிரிழப்புகள் நேரிடுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இது முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகம்.
About Writer
Sugapriya Prakash