வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 அக்டோபர் 2022 (15:22 IST)

ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட மூளையணுக்கள் வீடியோ கேம் விளையாடும் அதிசயம்

BBC
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் வைத்து மூளை அணுக்களை உருவாக்கினார்கள் என்பதே ஒரு அதிசய செய்திதான். இந்த அதிசய செய்திக்கு உள்ளே, மேலும் ஓர் அதிசய செய்தி என்ன தெரியுமா? இப்படி செயற்கையாக உருவாக்கப்பட்ட மூளை அணுக்கள் வீடியோ கேம் விளையாடக் கற்றுக்கொண்டன என்பதுதான் அது.

இந்த மூளை அணுக்கள் விளையாடும் வீடியோ கேம், 1970களில் பரவலாக விளையாடப்பட்ட டென்னிஸ் போன்ற வீடியோ கேமான 'பாங்க்' ஆகும்.

'குட்டி மூளை' என்று அழைக்கப்படும் இந்த மூளை அணுக்களால் சூழ்நிலையை உணரவும், அதற்கு ஏற்ப செயல்படவும் முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஓர் ஆய்வகத்தில் உணர்வுகள் கொண்ட ஒரு மூளையை உருவாக்குவது இதுவே முதல்முறை என்று அதனை உருவாக்கிய கார்டிகல் லேப்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ப்ரேட் ககன் நியூரான் என்ற அறிவியல் ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், மற்ற வல்லுநர்கள் இந்த ஆய்வு சுவாரசியமானது என்று கூறும் அதே நேரம், இந்த மூளை செல்களுக்கு உணர்வு இருப்பதாகக் கூறுவது ரொம்ப அதிகம் என்றும் கூறுகிறார்கள்.

"இந்த கருவியை விவரிக்க சரியான சொல்லை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது வெளியில் இருந்து தகவலை எடுத்துக்கொண்டு அதனை செயல்முறைக்கு உட்படுத்தி, உடனுக்குடன் அதற்கு எதிர்வினையாற்றுகிறது," என்று டாக்டர் ககன் கூறுகிறார்.

மூளை மிகச் சிறியதாக அமைந்துவிடும் 'மைக்ரோசெபாலி' என்ற குறைபாட்டை ஆய்வு செய்வதற்காக, 2013ஆம் ஆண்டு இந்த 'குட்டி-மூளைகளை' முதன்முதலில் உருவாக்கினர். பின்னர் இது மூளை வளர்ச்சிக்கான ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டன.

ஆனால் அவை சுற்றுப்புறத்தோடு எதிர்வினையாற்றுவது இதுவே முதல் முறை. இங்கே அந்த எதிர்வினை என்பது வீடியோ கேம் விளையாடுவது.

இந்த ஆய்வுக் குழு செய்த விஷயங்கள் என்னென்ன?
  • ஸ்டெம் செல்கள், சில எலி கரு முட்டைகள் ஆகியவற்றில் இருந்து 8 லட்சம் மூளையணுக்களை வளர்த்தனர்.
  • இந்த வீடியோ கேமில், பந்து எந்தப் பக்கத்தில் இருந்தது, மட்டையில் இருந்து எவ்வளவு தூரம் இருந்தது என்பதை விளக்கும் மின்முனைகள் மூலம் இந்த 'குட்டி-மூளை' இணைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், செல்கள் அவற்றின் மின் செயல்பாட்டை உருவாக்கியது.

இதற்கு இந்த மூளையின் குறைந்த ஆற்றலே பயன்படுத்தப்பட்டது; அதனால், ஆட்டம் தொடர்ந்தது.
Brain

ஆனால், பந்து ஒரு மட்டையை கடந்ததும், ஒரு புள்ளியில் பந்தைக் கொண்டு ஆட்டம் மறு தொடக்கம் செய்யப்பட்டபோதும், அவை ஒரு புதிய கணிக்க முடியாத சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட தன்னை மீண்டும் மறுசீரமைப்பு செய்து கொண்டன.

இந்த சின்ன மூளை ஐந்து நிமிடத்தில் விளையாட கற்றுக்கொண்டது.

அது அடிக்கடி பந்தை தவறவிட்டது. ஆனால் அதன் வெற்றி விகிதம் சராசரியை விட அதிகமாக இருந்தது.

ஆனால், எந்த உணர்வும் இல்லாமல், ஒரு மனிதர் உணர்ந்து விளையாடுவதைப் போல அல்லாமல் இந்த அணுக்கள் விளையாடியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அடுத்த சோதனை 'பீர்' உடனா?

அல்சைமர் போன்ற நரம்பியல் நோய்களுக்கான சிகிச்சையை சோதிக்க இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படலாம் என்று டாக்டர் ககன் கருதுகிறார்.

"மக்கள் இந்த திசுக்களைப் பார்க்கும்போது, ​​​​அந்த நேரத்தில் அவற்றுக்கு செயல்பாடு உள்ளதா இல்லையா என்பதை அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் மூளை செல்களின் நோக்கம் நிஜமாக தகவலைச் செயலாக்குவதாகும். அவற்றின் உண்மையான செயல்பாட்டைத் தட்டுவது இன்னும் பல ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை அளிக்கிறது. அவை இன்னும் விரிவான வழியில் ஆராயப்படலாம்." என்று அவர் கூறுகிறார்.

அடுத்து, குட்டி-மூளையின் பாங்க் விளையாடும் திறனில், மது ஏற்படுத்தும் தாக்கத்தை சோதிக்க டாக்டர் ககன் திட்டமிட்டுள்ளார்.

இது ஒரு மனித மூளையைப் போல் செயல்பாட்டால், இது ஒரு சோதனை நிலைப்பாட்டில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டும்.

இருப்பினும், டாக்டர் ககன் தமது உருவாக்கத்துக்கு புலன் உணர்வு உண்டு என்று கூறும் விளக்கம், பல வரையறைகளிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. அந்த விளக்கம், உணர்வுகள் மற்றும் உணர்வுகளைக் கொண்டிருக்கும் திறனைக் குறிக்கிறது.
 


கார்டிஃப் சைக்காலஜி ஸ்கூலின் துணை கெளரவ ஆராய்ச்சியாளரான டாக்டர் டீன் பர்னெட் 'சிந்தனை அமைப்பு ' என்ற சொல்லை பயன்படுத்த விரும்புகிறார்.

"தகவல்கள் அனுப்பப்பட்டு, தெளிவாகப் பயன்படுத்தப்பட்டு, மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ஆகவே, அவை பெறும் தூண்டுதலின் அடிப்படையில் சிந்திக்கின்றன என்று அவர் கூறுகிறார்.

இது குறித்த ஆராய்ச்சி மேலும் மேம்படும்போது, இந்த குட்டி-மூளைகள் மிகவும் நுட்பமானதாக மாற வாய்ப்புள்ளது. ஆனால் டாக்டர் ககனின் குழு உயிரியல் நெறியாளர்களுடன் இணைந்து அவர்கள் தற்செயலாக ஒரு மூளையை உருவாக்கவில்லை என்பதை உறுதிசெய்கிறது/ அனைத்து நெறிமுறை கேள்விகளையும் எழுப்புகிறது.

"இந்த புதிய தொழில்நுட்பத்தை புதிய கணினித் துறையைப் போலவே பார்க்க வேண்டும். முதல் டிரான்சிஸ்டர்கள் மிகவும் நம்பகமானவை அல்ல. ஆனால் பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, அவை உலகம் முழுவதும் மிகப்பெரிய தொழில்நுட்ப அற்புதங்களுக்கு வழிவகுத்தன." என்று அவர் கூறுகிறார்.

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் சதுரங்கத்தில் கிராண்ட்மாஸ்டர்களை வெல்லக்கூடிய சாதனங்களையும் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர்.

ஆனால், டாக்டர் ககனுடன் பணிபுரியும் லண்டன் யுனிவர்சிட்டி கல்லூரியின் பேராசிரியர் கார்ல் ஃபிரிஸ்டன் இவ்வாறு கூறுகிறார்: " இந்த குட்டி மூளை எந்த கற்பித்தலும் இல்லாமல் கற்றுக்கொண்டது. அவை தகவமைத்து கொள்கின்றன. இவை நெகிழ்வுதன்மை கொண்டுள்ளன."