1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
  4. Jail prisoners tries to escape from jail

கொரோனா வைரஸ் பயம்: சுரங்கம் தோண்டி தப்ப முயன்ற சிறைக் கைதிகள்!

கொரோனா வைரஸ்
மத்திய கொலம்பியாவில் உள்ள ஒரு சிறைச்சாலையில் தப்பிக்க முயன்ற கைதிகளின் முயற்சியை முறியடித்து, அங்கு நடக்கவிருந்த கலவரத்தை சிறைக் காவலர்கள் தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
அந்த குறிப்பிட்ட சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வில்லாவிசென்ஸியோ என்னும் இடத்தில் உள்ள சிறைச்சாலையிலிருந்து ஏழு கைதிகள் அவர்களில் ஒருவரின் அறையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிக்க முயன்றதாக சிறைக்காவலர்கள் கூறுகின்றனர்.
 
மேலும், அந்த கைதிகள் வெளியே செல்லும் பாதையை உருவாக்க பயன்படுத்திய ஆயுதங்கள் அவர்களே செய்தது எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த குறிப்பிட்ட சிறையில் மட்டும் 314 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இது கொலம்பியாவில் இருக்கும் சிறைகளிலேயே அதிகமான கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ள சிறைச்சாலையாகும். சிறைக் கைதிகள் வைரஸால் தொற்று ஏற்படலாம் என சிறைக்குள் போராட்டம் நடத்தினர்.
 
சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 300 பேரில் சமையலர்கள் மற்றும் சிறைக் காவலர்களும் இருக்கின்றனர். வில்லாவிசென்ஸியோவில் உள்ள சிறை மொத்தம் 1700 கைதிகளை கொண்டுள்ளது. இது அதிக கைதிகள் இருக்கும் சிறைச்சாலை என சிறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
இன்னும் முழுமையாகத் தோண்டி முடிக்கப்படாத அந்த சுரங்கம் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்றாலும், சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் படத்தை சிறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று சமயத்தில் கொலம்பியா சிறைச்சாலைகளில் பதற்றம் பெருகி வருகிறது.
 
கடந்த மாதம் பகோட்டாவில் உள்ள லா மொடெலோ என்னும் சிறைச்சாலையில் நடந்த கலவரத்தில் 20 கைதிகள் கொல்லப்பட்டனர். சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று, சிறைக்குள் இருக்கும் ஆயிரக்கணக்கான கைதிகளை வீட்டிற்கு அனுப்பி வீட்டுக்காவலில் வைக்குமாறு அரசு உத்தரவு பிறபித்த போதும் மிக சிலர் மட்டுமே வெளியே வந்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
ஊரடங்கை நீட்டிக்க அமைச்சரவை முடிவு! – தளர்வுகள் அளிக்கப்படுமா?