வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 ஜனவரி 2021 (15:07 IST)

இந்திய - சீன எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்கள் இடையே மீண்டும் மோதல்

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் மீண்டும் இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதலில் ஈடுபட்டதாகவும், இதில் இரண்டு தரப்பிலும் வீரர்களுக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
சிக்கிம் மாநிலத்தின் வடக்குப்பகுதியிலுள்ள எல்லைப்பகுதியில் மூன்று நாட்களுக்கு முன்னர் இந்த மோதல் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே மற்றொரு சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலை அடுத்து இந்தியா மற்றும் சீனாவுக்கிடையேயான உறவில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் இந்த செய்தி வெளிவந்துள்ளது.
 
கடந்த ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கத்தில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் குறைந்தது 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எனினும், தங்களது தரப்பில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து சீன ராணுவம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்கிமில் உள்ள நாகு லா கணவாய் என்ற இடத்தில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
ஒரு சீன ரோந்து படை இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது, அவர்கள் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக சீன தரப்பிலிருந்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.