1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 டிசம்பர் 2020 (08:40 IST)

வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்! – முற்றும் முதல்வர் – மய்யத்தார் மோதல்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், மநீம கமல்ஹாசனுக்கும் வார்த்தை போர் எழுந்துள்ள நிலையில் கமல்ஹாசன் எம்ஜிஆர் பாடல் ஒன்றை பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணிகளுடனே அரசியல்வாதிகள் இடையேயான வார்த்தை மோதலும் அதிகரித்து வருகிறது. மதுரைக்கு பிரச்சாரத்திற்கு சென்ற கமல்ஹாசன் ‘எம்ஜிஆரின் நீட்சி நான்’ என பேசியது தொடங்கி அதிமுக – மநீம இடையே வார்த்தை போர் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து எம்ஜிஆரை கமல்ஹாசன் சொந்தம் கொண்டாடி பேசி வந்ததை அதிமுக அமைச்சர்கள் கண்டித்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் தனது படங்கள் மூலமாக குடும்பங்களை சீரழிப்பதாகவும், தற்போது சினிமாவை விட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக கலாச்சாரத்தை சீர்கெடுப்பதாகவும் பேசியிருந்தார்.

அதற்கு “முதல்வரும் பிக்பாஸ் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என கமல்ஹாசன் ட்விட்டரில் கூற முதல்வர் பெயரில் உள்ள போலி ஐடியிலிருந்து வந்த கலாய் பதில் மேலும் வைரலானது. இந்நிலையில் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன் “சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார்.. ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார். `எதிர் காலம் வரும் என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்' என எம்ஜிஆர் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வண்ணம் அவர் இந்த பதிவை இட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படும் நிலையில் கமலுக்கு எதிராக பலர் பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் – மய்யத்தார் இடையேயான இந்த வார்த்தை மோதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.