வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (13:49 IST)

பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண் கைதி: மனித உரிமைகள் ஆணையம் தலையீடு

இந்தியாவின் சில முக்கிய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

காவல் நிலையத்தில் பெண் கைதி பாலியல் வல்லுறவு\


காவல்துறை விசாரணையின்போது பெண் விசாரணைக் கைதி ஒருவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்தியப் பிரதேச அரசு மற்றும் காவல் துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி.

மே மாதம் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் ஐந்து மாதங்களுக்கு பின்னரே மாவட்ட நீதிபதிக்கு தெரிய வந்துள்ளது.

கொலை வழக்கு ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த பெண், காவல் துறையினர் ஐந்து பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அதை சிறை வார்டன் உயதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தவில்லை என்றும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த 20 வயது பெண்ணை ஆண் காவலர்கள் பாலியல் வல்லுறவு செய்வதை ஒரு பெண் காவலர் எதிர்த்துள்ளார். ஆனால், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை என்று மனித உரிமைகள் ஆணையம் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.

ரேவா மாவட்டத்தின் மங்காவா காவல் நிலையத்தில் பணியாற்றும் ஐந்து பேர் மீது அப்பெண் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போது நீதிமன்றத் காவலில் இருக்கும் அப்பெண், அவர் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சசிகலா விடுதலை எப்போது?

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, தன்னுடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு கைப்பட கடிதம் ஒன்று எழுதியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி.

சிறைத்துறையினர், எனது நன்னடத்தை தண்டனை குறைப்பு சலுகை விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவு எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.

உத்தரவு எனக்கு கிடைத்தவுடன் உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதன்படி, அபராத தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும். கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் அபராதம் கட்டிய பிறகும், உச்ச நீதிமன்றத்தில் சட்டப்படியாக 'கியூரேட்டிவ்' மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்தவழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும், அதுபற்றி டி.டி.வி.தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும்.

தங்களின் கடித இணைப்பில் அனுப்பிய இணையதள செய்தியை படித்து பார்த்தேன். எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஓர் இணையதள ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது. உள்நோக்கம் கொண்ட நபர்கள் பரப்பிய விஷம பொய் செய்தியை, உண்மை என நம்பி அந்த இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

நான் வணங்கும் இறைவனின் ஆசியோடும், என் உடன்பிறவா அக்காவின் ஆசியோடும், அவரது கோடிக்கணக்கான தொண்டர்களின் வாழ்த்துகளாலும் நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்.

அந்த இணையதள செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள, சமீபத்தில் ஜெய் ஆனந்த் என்னை வந்து சிறையில் சந்தித்ததாகவும், பேசியதாகவும் என் நிலையை பார்த்து அதிர்ந்து போனதாகவும், "அத்தை நீங்கள் பத்திரமாக வெளியே வந்தாலே போதும். தஞ்சாவூரில் இயற்கை சூழ்ந்த பண்ணை வீட்டில், நீங்கள் இனி நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். உங்களை எல்லோரும் ரொம்ப புண்படுத்திவிட்டார்கள். இனிமேல் வருகின்ற காலமாவது நீங்கள் நிம்மதியா இருக்க வேண்டும்" என என்னிடம் சொன்னதாக வெளியிட்டுள்ள செய்தியில் ஒரு சதவீதம்கூட உண்மையில்லை. ஜெய் ஆனந்த் என்னை சந்திக்கவே இல்லை என்றும் சசிகலா அக்கடிதத்தில் கூறியுள்ளார் என்கிறது அந்த செய்தி.

ஹஜ் புனிதப் பயணம் எப்போது?

மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தலைமையில் ஹஜ் புனிதப் பயண ஆய்வுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது,

2021-ஆம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் ஜூன் - ஜூலை மாதங்களில் அனுமதிக்கப்பட உள்ளது. சௌதி அரேபிய அரசு இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்ட பின்னா், இதற்கான விண்ணப்பத்தைச் சமா்பிப்பதற்கான அறிவிப்பை இந்திய ஹஜ் கமிட்டி உள்பட பிற புனிதப் பயண ஏற்பாட்டாளா்கள் வெளியிடுவா்.

சௌதி அரேபிய அரசு மற்றும் இந்தியா சாா்பில் தேவையான கொரோனா வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்ட பின்னரே, இந்தப் புனிதப் பயணம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்கும் வசதி, போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து ஹஜ் நடைமுறைகளிலும் இம்முறை குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும்.

புனித யாத்ரீகா்களின் உடல் நலனுக்குத்தான் மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும். எனவே, தேவையான முன்னேற்பாடுகளை இந்திய ஹஜ் கமிட்டு உள்ளிட்ட பிற புனிதப் பயண ஏற்பாட்டாளா்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறினாா்.